Our Feeds


Tuesday, June 2, 2026

Zameera

எரிபொருள் விலை உயர்வுக்கு நிறுவனங்களின் மாஃபியாக்கள் மற்றும் ஊழல் நடவடிக்கைகளே காரணம்


 உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்து, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகள் தங்களது உள்நாட்டு எரிபொருள் விலையைக் குறைத்துள்ள போதிலும், இலங்கையில் நிறுவனங்களின் மாஃபியாக்கள் மற்றும் ஊழல்கள் காரணமாகவே எரிபொருள் விலை குறைக்கப்படாமல் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் கூட்டு எதிர்க்கட்சி சார்பில் நவ ஜனதா பெரமுனவின் தலைவர் சுகீஸ்வர பண்டார பலத்த குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். 

கொழும்பில் நடைபெற்ற இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஜனதா சேவக கட்சியின் தலைவர் ஜகத் விஜேசேகர மற்றும் லங்கா சமசமாஜ கட்சியின் கொழும்பு மாவட்ட தலைவர் பேஷல செனசிங்க ஆகியோரும் கலந்துகொண்டிருந்த நிலையில், பிரதானமாக கருத்து வெளியிட்ட சுகீஸ்வர பண்டார, தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் கடந்த எட்டு மாத காலத்திற்குள் பல ‘கின்னஸ் சாதனைகளை’ படைத்துள்ளதாக வினோதமாகக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு தரமற்ற மற்றும் சாம்பல் நிறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்தமை, அதிக விலைக்கு எரிபொருளைக் கொள்வனவு செய்தமை மற்றும் மின்வெட்டை மேலாண்மை செய்ய முற்பட்டபோது ஏற்பட்ட பில்லியன் கணக்கான டொலர் நஷ்டத்தை ஈடுசெய்யவே அரசாங்கம் தற்போது எரிபொருள் விலையைக் குறைக்காமல் அதிகரித்துள்ளது என அவர் குற்றம் சாட்டினார். 

தெற்காசியாவிலேயே அதிக விலைக்கு எரிபொருளை விற்கும் நாடாக இலங்கை மாறியுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், கடந்த பெப்ரவரி 28 முதல் மே 31 வரையான காலப்பகுதியில், உலகிலேயே அதிக சதவீதத்தால் டீசல் மற்றும் பெட்ரோல் விலையை அதிகரித்த நாடாக இலங்கை பதிவாகியுள்ளதாக புள்ளிவிவரங்களை வெளியிட்டார். இதன்படி, இலங்கையில் டீசல் விலை 38.9% ஆகவும், பெட்ரோல் விலை 27.6% ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், ஈரான் - இஸ்ரேல் யுத்தம் காரணமாகவே விலை அதிகரிக்கப்பட்டதாக அரசாங்கம் கூறுவது முற்றிலும் பொய் எனவும் அவர் மறுத்தார்.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இரு வாரங்களுக்கு முன்னர் நாட்டில் இரு வாரங்களுக்குரிய எரிபொருளே உள்ளதாகக் கூறியிருந்ததை நினைவுபடுத்திய சுகீஸ்வர பண்டார, அப்போது உலக சந்தையில் கச்சா எண்ணெய் பேரல் 94 டொலராக இருந்தது என்றும், தற்போது விலை மேலும் குறைந்துள்ள நிலையிலும் உள்நாட்டில் விலையை அதிகரிப்பது தற்போதைய அரசாங்கத்திற்கும் அதன் எரிசக்தி அமைச்சருக்கும் விலை கட்டுப்பாடு குறித்து எந்தவொரு முறையான புரிதலும் இல்லை என்பதையே காட்டுகின்றது என்றும் சாடினார். 

அத்துடன், அன்று காஞ்சனவின் கணக்கிற்கு தரகுப் பணம் செல்வதாகக் கூறியவர்கள், இன்று இந்த தனியார் நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் சட்டவிரோத தரகுப் பணம் தற்போது 'பெலவத்தைக்கு' செல்வது குறித்து மௌனம் காப்பது ஏன் என்றும், இந்த தரகுப் பணம் யாருக்குச் செல்கிறது என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும், தற்போதைய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திற்கு (IMF) நாட்டை காட்டிக்கொடுத்துள்ளதாகக் குற்றம் சாட்டிய அவர், ரணில் விக்ரமசிங்க ஆட்சியில் இருந்திருந்தால் IMF தாளத்திற்கு இவ்வாறு ஆடியிருக்க மாட்டார் என்றார். நாட்டின் பணவீக்கம் 7% ஆக உயர்ந்துள்ள நிலையில், பொருளாதாரம் முறையாக நிர்வகிக்கப்படாமல் தற்காலிக தீர்வுகளையே அரசாங்கம் நம்பியிருக்கின்றது என்றும், சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயலாற்ற வேண்டுமாயின், ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

எதிர்காலத்தில் ஏற்படவுள்ள எரிபொருள் விலை அதிகரிப்பின் காரணமாக ஒரு 'பிளேன்டி' மற்றும் தேநீர் முதல் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயரும் என எச்சரித்த சுகீஸ்வர பண்டார, இன்று நாட்டில் ஒரு 'பொலிஸ் ராஜ்யமே' நிலவுவதாகவும், அன்று ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் ஆட்சியில் இருந்தபோது கூட இப்படி ஒரு பொலிஸ் ராஜ்யம் இருக்கவில்லை என்றும் சாடினார். 

எதிர்காலத்தில் கோட்டாபய ராஜபக்ஷவை மீண்டும் அரசியலுக்கு கொண்டு வரும் எதிர்பார்ப்பு மற்றும் கூட்டு எதிர்க்கட்சியின் தலைமைத்துவம் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், கூட்டு எதிர்க்கட்சி என்பது பல கட்சிகளின் கூட்டணியாகும் என்பதால் அதற்கு இன்னும் ஒரு குறிப்பிட்ட தலைவர் நியமிக்கப்படவில்லை என்றும், அரசாங்கம் தேர்தலை நடத்தும் தருணத்தில் முறையானதொரு தலைமைத்துவம் உருவாகும் என்றும் குறிப்பிட்டார். 

மேலும், கடந்த தேர்தல்களின்போது அரசாங்கத்திற்கு 24 இலட்சம் வாக்குகள் குறைந்திருந்ததன் காரணமாகவே அவர்கள் மாகாண சபை தேர்தலை நடத்த அஞ்சுகின்றனர் என்றும், சிலவேளைகளில் தற்போதைய ஆட்சியாளர்கள் ஜனாதிபதித் தேர்தலையும் கூட நடத்தாமல் தட்டிக்கழிக்கக் கூடும் என்றும் சுகீஸ்வர பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.

(ஞான பிரசாந்தன்)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »