Our Feeds


Thursday, June 18, 2026

Zameera

டெங்கு அதிகரித்தால் வைத்தியசாலைகளுக்கு சவால் - நளிந்த ஜயதிஸ்ஸ


 டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தால், அந்த நிலைமையைத் தாங்குவதற்கு வைத்தியசாலை கட்டமைப்புக்கு கடினமாகிவிடும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 


டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்குப் பொதுமக்களினதும் நிறுவனங்களினதும் பொறுப்பு மிகவும் முக்கியமானது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 


வீடுகள், அரச நிறுவனங்கள் மற்றும் ஏனைய இடங்களை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் டெங்கு நுளம்புகள் பெருகுவதைத் தடுக்க வேண்டும் எனவும், நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதன் மூலம் சுகாதாரக் கட்டமைப்புக்கு கடுமையான அழுத்தம் ஏற்படக்கூடும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். 


பேருவளை பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 


அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, 


நீண்ட கால அடிப்படையில் நாம் எதனைச் செய்ய முயன்றாலும், குறுகிய காலத்தில் டெங்கு நோயாளர்களின் அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவதற்கு இருக்கும் ஒரே தீர்வு நுளம்புகள் பெருகும் இடங்களை அழிப்பதுதான். 


அதற்கு நாம் செய்ய வேண்டியது நம்மைச் சுற்றியுள்ள சூழலை சுத்தமாக வைத்திருப்பது மட்டுமே. இதைவிடக் கூடுதலாக நோயாளர்கள் பதிவாகத் தொடங்கினால், அதனை எமது வைத்தியசாலை கட்டமைப்பால் தாங்கிக்கொள்ள முடியாமல் போய்விடும். 


இவ்வாறானதொரு பிரச்சினை முன்னோக்கிச் செல்லும்போது இது போன்றதொரு நிலைமையே ஏற்படும். அவ்வாறு நடந்தால் தான் நோயாளர் பராமரிப்புச் சேவைகள் வீழ்ச்சியடையும். இந்த நிலையை இன்னும் எம்மால் கட்டுப்படுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »