Our Feeds


Monday, June 1, 2026

Zameera

தரமற்ற நிலக்கரி இறக்குமதியே எரிபொருள் விலை உயர்வுக்கு காரணம் – நாமல் ராஜபக்ஷ


 தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதால் ஏற்பட்டுள்ள நட்டத்தை ஈடுசெய்யவும், அதற்குப் பதிலாக மின் உற்பத்திக்காக அதிகளவில் எரிபொருளைப் பயன்படுத்த வேண்டியேற்பட்டுள்ளதாலுமே அரசாங்கம் எரிபொருள் விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

நேற்று மாலை நுகேகொடையில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் அரசாங்கங்கள் எரிபொருள் விலையை உயர்த்தும்போது அமைச்சர்களுக்கு தரகுப் பணம் சென்றதாகக் கூறப்பட்ட போதிலும், இன்று எரிபொருள் விலை உயர்த்தப்பட்டதற்கான முக்கிய காரணம் தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டமையாகும் என அவர் சுட்டிக்காட்டினார். 

இதனால் ஏற்பட்டுள்ள பெரும் நட்டத்திற்கு மத்தியில், மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்காக நாளொன்றுக்கு பல இலட்சம் லீற்றர் எரிபொருளை மேலதிகமாக எரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதுடன், உலகிலேயே அதிக விலைக்கு எரிபொருளைக் கொள்வனவு செய்து, அந்த நட்டத்தை இந்த நாட்டு மக்களே இன்று செலுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

தற்போதைய அரசாங்கம் மக்கள் குறித்து எவ்விதத்திலும் சிந்திப்பதில்லை என்றும், தனது நிர்வாகத் திறமையின்மை, ஊழல் மற்றும் நட்டங்கள் அனைத்தையும் மக்கள் மீதே சுமத்துவதாகவும் தெரிவித்த அவர், விலைகளை அதிகரிப்பதற்கு அரசாங்கம் எதற்கு என்று அன்று மேடைகளில் கேட்டவர்களே, இன்று ஆட்சிக்கு வந்து மக்களின் தலை மேல் அனைத்து சுமைகளையும் சுமத்துகிறார்கள் என்றும் விசனம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் செயற்பாடுகள் மற்றும் நீதிமன்ற விவகாரங்கள் குறித்துப் பேசிய நாமல் ராஜபக்ஷ, மேடைகளில் நின்றுகொண்டு தீர்ப்பு வழங்கும் நிலைக்கு ஜனாதிபதி சென்றுள்ளதாகக் கூறினார். நீதிமன்றத் தவணை நாளன்று நீதிமன்றத்திற்கு வர முடியும் எனக் குறிப்பிட்ட அவர், பாராளுமன்றத்தில் தான் பேசும்போது தனக்கு அருகில் வந்து நிற்கும் 'திசைகாட்டி' (தேசிய மக்கள் சக்தி) கட்சியின் 159 உறுப்பினர்களும் அந்த வழக்கின்போது நீதிமன்றத்திற்கு வந்து அமர்ந்திருக்குமாறு அழைப்பு விடுத்தார். 

அப்போதுதான் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பேசாமல், அவர்களால் உண்மைக் கதையைத் தெரிந்துகொள்ள முடியும் என்றும், இல்லையெனில் மேடைகளிலேயே தீர்ப்பு வழங்கும் உங்களுடைய ஜனாதிபதியிடமே இதைக் கேட்டுத் தெரிந்துகொள்ளுமாறும் அவர் சவால் விடுத்துள்ளார்.

மேலும், உடனடியாக உள்ளூராட்சித் தேர்தலை நடத்தி, பிரதேச தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பை மக்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்திய அவர், மாகாண சபைகளின் அதிகாரங்களும் நிதியும் ஜனாதிபதியின் ஒன்பது அரசியல் பிரதிநிதிகளான ஆளுநர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினார். 

இந்த அதிகாரங்களை அரசியல் பிரதிநிதிகளிடம் வழங்காமல் மக்கள் பிரதிநிதிகளிடம் வழங்கியிருக்க வேண்டும் என்றும், ஏனெனில் அவர்களே மக்களுக்குப் பொறுப்புக்கூறக் கடமைப்பட்டவர்கள் என்றும் கூறினார். 

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட ஆளுநர் ஒருவர் இராஜிநாமா செய்ததை நினைவுபடுத்திய அவர், தேர்தல் நெருங்க நெருங்க ஏனையோரும் இராஜிநாமா செய்துவிட்டு தத்தமது நாடுகளுக்குச் சென்றுவிடுவார்கள் என்றும், இறுதியில் மக்களுக்குப் பொறுப்புக்கூற யாரும் இருக்க மாட்டார்கள் என்றும் எச்சரித்தார்.

அரசாங்கம் மூன்றரை ஆண்டுகள் நீடிக்குமா இல்லையா என்பதை சட்டப்பூர்வமாக தேர்தல் ஆணைக்குழுவும் மக்களுமே தீர்மானிக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட நாமல் ராஜபக்ஷ, அரசாங்கம் பதவியில் இருக்கும் வரை அவர்களிடம் வேலை வாங்குவதே தமது நோக்கம் என்றார். அரசாங்கத்தின் தவறுகளையும், திறமையின்மையையும் தாம் தொடர்ந்து சுட்டிக்காட்டுவதுடன், மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை இந்த அரசாங்கம் நிறைவேற்றும் வரை, தாம் அரசாங்கத்திற்கு எதிராகத் தொடர்ந்து போராடப் போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இறுதியாக, அண்மையில் இலங்கைக்கு வந்த புதிய நிலக்கரி கப்பலும் தரமற்றது என நிராகரிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தற்போதைய அரசாங்கத்திற்கு வேலை தெரியாது என்றும், ஊழலும் மோசடியும்தான் நிறைந்துள்ளது என்றும் சாடினார். 

அடுத்த நிலக்கரி கப்பலும் தரம் குறைந்ததாக மாறும் பட்சத்தில், இந்தத் தோல்விகளை மறைப்பதற்காகத் தன்னை மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) அழைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

(ஞான பிரசாந்தன்)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »