கொங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்கு மாகாணங்களில் 17-வது எபோலா வைரஸ் மிக வேகமாகப் பரவி வருவதை உலக சுகாதார ஸ்தாபனம் உறுதிப்படுத்தியுள்ளது. தீவிர ஆயுத மோதல்கள், உட்கட்டமைப்பு வசதி இல்லாமை மற்றும் தற்போதைய திரிபுக்குத் தடுப்பூசி இல்லாத நிலை ஆகியவற்றால் இந்தத் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவது உலகளாவிய சவாலாக மாறியுள்ளது.
கடந்த மே 15 ஆம் திகதி கொங்கோ அரசாங்கத்தால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட இந்த எபோலா பரவல், அதற்கு பல வாரங்களுக்கு முன்பிருந்தே சுரங்க நகரமான மொங்ப்வாலு போன்ற பகுதிகளில் "மர்ம நோய்" என்ற பெயரில் பரவி வந்துள்ளது.
முந்தைய எபோலா வெடிப்புகள் 'ஜைர்' என்ற வைரஸ் திரிபு மூலம் ஏற்பட்டவை, அதற்கென 2018-2019 காலப்பகுதியில் பிரத்யேக தடுப்பூசிகள் கண்டறியப்பட்டன. ஆனால், தற்போதைய 17-வது அலை 'புண்டிபுக்யோ' எனப்படும் மிகவும் அரிய வகை எபோலா திரிபினால் ஏற்பட்டுள்ளது.
இந்த புண்டிபுக்யோ திரிபுக்கு இதுவரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியோ அல்லது குறிப்பிட்ட வைரஸ் எதிர்ப்பு மருந்தோ உலகிலேயே இல்லை.
ஆரம்பத்தில் இதன் அறிகுறிகள் மலேரியா, டைபாய்ட் அல்லது மஞ்சள் காய்ச்சல் போலக் காட்சியளிப்பதால் வைத்தியர்கள் குழப்பமடைந்தனர். மேலும், உள்ளூர் ஆய்வகங்களால் 'ஜைர்' திரிபை மட்டுமே கண்டறிய முடிந்ததால், இந்தத் தொற்றை ஆரம்பத்தில் உறுதிப்படுத்த முடியாமல் போனது.
கொங்கோவின் இட்டூரி மாகாணத்தை மையமாகக் கொண்டு பரவிய இந்த வைரஸ், தற்போது எல்லை கடந்து அண்டை நாடான உகாண்டாவின் தலைநகர் கம்பாலா வரை பரவியுள்ளது.
ஆபிரிக்கா நோய் கட்டுப்பாட்டு மையம் மற்றும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் தற்போதைய புள்ளிவிபரங்களின்படி, கொங்கோவில் இதுவரை 890-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 230-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
உகாண்டாவிலும் 19 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் தீவிரத்தன்மை மற்றும் பரவல் வேகம் காரணமாக, உலக சுகாதார ஸ்தாபனம் இதனை 'சர்வதேச கவலைக்குரிய பொதுச் சுகாதார அவசரநிலை' ஆகப் பிரகடனப்படுத்தியுள்ளது.
தொற்றுப் பரவலின் மையப்பகுதியான இட்டூரி, ஐஎஸ் பயங்கரவாத அமைப்போடு தொடர்புடைய ஆயுதக் குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ளதால், மருத்துவக் குழுக்களால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்குச் செல்ல முடிவதில்லை.
அரசு மற்றும் நவீன வைத்தியம் மீது நம்பிக்கையற்ற உள்ளூர் மக்கள், எபோலாவை ஒரு "மந்திர நோய்" என நம்பி பாரம்பரிய வைத்தியர்களிடம் செல்கின்றனர். வைத்தியசாலைகளில் உயிரிழப்போரின் உடல்களை உறவினர்கள் வலுக்கட்டாயமாக வீட்டிற்கு எடுத்துச் செல்வதால் தொற்றுப் பரவல் பல மடங்கு அதிகரிக்கிறது.
பாதுகாப்பு உடைகள் இன்றி மோட்டார் சைக்கிள் டாக்சிகளில் நோயாளிகள் அழைத்து வரப்படுகின்றனர். மேலும் விமானச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால் சர்வதேச மருத்துவ உதவிகள் வந்து சேருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், புண்டிபுக்யோ திரிபுக்கான புதிய தடுப்பூசிகளின் மருத்துவப் பரிசோதனைகள் தீவிரமாக நடந்து வருவதாகவும், இந்த ஆண்டின் இறுதிக்குள் புதிய தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரலாம் என்றும் ஆபிரிக்கா நோய் கட்டுப்பாட்டு மையம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
