மலேசியாவில் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடக கணக்குகளை தொடங்குவதற்கு அந்நாட்டு அரசு அதிரடி தடை விதித்துள்ளது. இத்தகவலை மலேசிய தகவல் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் திங்கட்கிழமை உறுதிப்படுத்தியதாக ‘ராய்ட்டர்ஸ்’ (Reuters) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
உடனடியாக அமலுக்கு வந்துள்ள இந்த புதிய விதிகளின்படி, மெட்டா நிறுவனத்தின் ஃபேஸ்புக் (Facebook) மற்றும் இன்ஸ்டாகிராம் (Instagram), டிக்டாக் (TikTok) மற்றும் கூகுளின் யூடியூப் (YouTube) உள்ளிட்ட முன்னணி சமூக ஊடகத் தளங்கள், புதிய பயனர் ஒருவரின் வயதை அரசின் அடையாள ஆவணங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து உறுதிப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு 10 மில்லியன் ரிங்கிட் (மலேசிய நாணயம்) வரை அபராதம் விதிக்கப்படும்; இது தோராயமாக 2.5 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்குச் சமமாகும்.
எனினும், தற்பொழுது பயன்பாட்டில் உள்ள சிறுவர்களின் கணக்குகள் உடனடியாக நீக்கப்பட மாட்டாது. அதற்குப் பதிலாக, ஏற்கனவே தங்கள் சேவைகளைப் பயன்படுத்தி வரும் சிறுவர்களின் வயதைச் சரிபார்ப்பதற்கு (Age verification), சமூக ஊடக நிறுவனங்களுக்கு மலேசியத் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (MCMC) ஆறு மாத கால அவகாசம் வழங்கியுள்ளது.
"இந்தக் கொள்கையானது, இளைஞர்களை இணையத்திலிருந்து துண்டிப்பதற்காகவோ அல்லது அவர்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்காகவோ கொண்டு வரப்படவில்லை; மாறாக, இணைய வெளியில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் சமூக ஊடகத் தளங்கள், பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் கூடுதல் பொறுப்புடன் செயல்படுவதை ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும்," என்று அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.
இளைஞர்களின் மனநலம் மற்றும் பாதுகாப்பு குறித்த கவலைகளினால், மைனர்கள் (Minor) சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குக் சட்டப்பூர்வக் கட்டுப்பாடுகளை விதிக்கும் நாடுகளின் பட்டியலில் தற்பொழுது மலேசியாவும் இணைந்துள்ளது.
மேலும், இணைய உள்ளடக்கங்கள் மீதான மலேசிய அதிகாரிகளின் பரந்த அளவிலான கட்டுப்பாட்டு நடவடிக்கையையும் இது பிரதிபலிக்கிறது. சமீபத்திய ஆண்டுகளில் இணையத்தில் தீங்கு விளைவிக்கும் பதிவுகள் கணிசமாக அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அதிகாரிகள்; குறிப்பாக இன, மத ரீதியிலான பதற்றத்தைத் தூண்டும் பதிவுகள் மற்றும் நாட்டின் மன்னராட்சியைக் விமர்சிக்கும் உள்ளடக்கங்களைக் குறிவைத்து தீவிரமான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
