Our Feeds


Thursday, July 9, 2026

Zameera

பல கோடி ரூபாய் தங்கத்துடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது


 ஒரு கோடியே 18 இலட்சத்து 85 ஆயிரத்து 514 ரூபாய் பெறுமதியான தங்கத்துடன் நபர் ஒருவர் கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்டுள்ளார். 


முறையான அனுமதிப்பத்திரங்கள் இன்றியும், சுங்கத் திணைக்களத்திற்கு அறிவிக்காமலும் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் கொண்டுவரப்பட்ட இந்தத் தங்கத்தை, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல முயன்ற ஒருவரே நேற்று (08) விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 


கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மாத்தளை பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய வர்த்தகர் என தெரியவந்துள்ளது. 


அவர் நேற்று காலை 06.30 மணியளவில் டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். 


இதன்போது, அவர் கொண்டு வந்த பயணப் பொதிகளுக்குள் 271 கிராம் மற்றும் 480 மில்லிகிராம் எடையுடைய 12 தங்க மாலைகள், 10 காப்புகள் மற்றும் 2 தங்கக் கட்டிகள் ஆகியவற்றை மறைத்து வைத்திருந்துள்ளார். 


பின்னர், இது குறித்த மேலதிக விசாரணைகளுக்காக இன்று காலை சுங்கத் திணைக்கள அதிகாரிகளிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார். 


அங்கு நடத்தப்பட்ட முறையான சுங்கப் பரிசோதனையின் பின்னர், குறித்த தங்கம் அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்டதுடன், சந்தேகநபருக்கு 10 இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »