நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின்
போது உயிரிழந்த அதிகாரிகள் மற்றும் சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்படும். விசாரணையின் மீது நம்பிக்கை வையுங்கள். இதுவொரு சாதாரண மரணம் அல்ல, இதுவொரு மனிதப் படுகொலை. தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை வழங்கப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாநாயக்கார தெரிவித்தார்.பொரல்லை சிறைச்சாலை தலைமையகத்தில் புதன்கிழமை (8) உயிரிழந்த அதிகாரிகளின் பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில், அங்கு வருகை தந்திருந்த போதே அமைச்சர் சிறைச்சாலை அதிகாரிகளுக்குத் தெரிவிக்கையில்,
தற்போது உயிரிழந்தவர்களுக்கான இறுதி மரியாதையைச் செலுத்துவது அவசியம். ஆகையால் அவர்களது இறுதிக்கிரியைகளை மேற்கொள்ள வேண்டிய தருணமிது. இந்தச் சம்பவம் தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைகள் குறித்து முழுமையான நம்பிக்கை வையுங்கள். இதுவொரு சாதாரண மரணம் அல்ல, இதுவொரு மனிதப் படுகொலை. தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும், சாட்சி மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் அவர்களுக்குரிய தண்டனை பெற்றுத்தரப்படும். இந்த விவகாரத்தில் எவ்வித அரசியல் தலையீடுகளுக்கோ அல்லது பக்கச்சார்பான நிலைப்பாடுகளுக்கோ இடமளிக்கப்பட மாட்டாது . பக்கச்சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என உறுதியளிக்கிறேன்" என்றார்.
