Our Feeds


Sunday, August 9, 2026

SHAHNI RAMEES

22ஆவது அரசியலமைப்புச் சீர்திருத்தம் சர்வாதிகார ஆட்சிக்கான முதற்படி!

 


உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின்

ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிக்கும் வகையில் அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22ஆவது சீர்திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய எவருக்கும் முழுச் சட்டப் பூர்வ உரிமை உள்ளதாகவும், அந்த உரிமையை நிச்சயமாகப் பயன்படுத்த எதிர்பார்ப்பதாகவும் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.


கண்டியிலுள்ள அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் அனுநாயக தேரர்களை, பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், தயாசிரி ஜயசேகர, பாட்டலி சம்பிக்க ரணவக்க, அஜித் மான்னப்பெரும மற்றும் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட கூட்டு எதிர்கட்சிப் பிரதிநிதிகள் நேற்று (08) நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடினர். இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,


அரசாங்கம் யாருடனும் கலந்துரையாடாமல் இரகசியமான முறையில் இந்த 22ஆவது சீர்திருத்த அரசுத் தகவல் வர்த்தமானியை வெளியிட்டுள்ளது. வழக்கு விசாரணைகளில் ஏற்படும் தாமதங்களை விரைவுபடுத்துவதற்காகவே நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லை அதிகரிக்கப்படுவதாக அரசாங்கம் கூறும் காரணம் முற்றிலும் உண்மையற்றதாகும். உண்மையிலேயே வழக்குத் தாமதங்களைத் தவிர்க்க வேண்டுமாயின் நீதிபதிகளின் எண்ணிக்கையே அதிகரிக்கப்பட வேண்டும்.


மாறாக, தற்போதைய நீதிபதிகளின் சேவைக் காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகள் நீடிப்பதன் மூலம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது. நீதித்துறையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, நாட்டில் சர்வாதிகார ஆட்சியை நிறுவுவதற்கான முதற்படியே இதுவாகும். இதன் அடுத்த கட்டமாக தேர்தல்களை ஒத்திவைப்பதற்கும், ஜனாதிபதிபதவிக் காலத்தை நீடிப்பதற்குமே அரசாங்கம் வழிவகுக்கின்றது.


அனுபவமிக்க நிபுணர்களின் சேவையைப் பெற்றுக்கொள்வதற்காகவே வயதெல்லை அதிகரிக்கப்படுவதாகக் கூறப்படும் வாதமும் செல்லுபடியாகாது. அப்படியாயின் 63 வயதில் ஓய்வுபெறும் விசேட மருத்துவர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மற்றும் அரசுத் துறைத் தலைவர்களின் சேவையை அரசாங்கம் ஏன் நீடிக்க முற்படவில்லை? ஏனைய அனைவரையும் மறந்துவிட்டு உயர் நீதிமன்ற நீதிபதிகளைப் பற்றி மட்டும் சிந்திப்பதன் பின்னணியில் மறைமுக அரசியல் நிகழ்ச்சி நிரல் ஒன்றே உள்ளது.


அரசுத் தகவல் வர்த்தமானி வெளியிடப்பட்டு இரண்டு வாரங்களுக்குள் எந்தவொரு குடிமகனுக்கும் உயர் நீதிமன்றத்தை நாடி, இந்தச் சீர்திருத்தம் அரசியலமைப்புக்கு முரணானது என வாதிட உரிமை உண்டு. அந்த உரிமையைப் பயன்படுத்தி நாங்கள் நீதிமன்றத்தை நாடவுள்ளோம். சர்வதேச சட்ட அமைப்புகளும் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்குத் தமது பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளதாக அவர் அங்கு மேலும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »