நாடு முழுவதும் குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள குற்ற மற்றும் போதைப்பொருள் தடுப்பு நாளாந்த தேடுதல் நடவடிக்கைகளின் மூலம் மேலும் 537 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (23) 27,001 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே குறித்த சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சந்தேகநபர்களில் குற்றங்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 19 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 147 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், இந்தத் தேடுதல் நடவடிக்கையின் போது மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் 50 பேரும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் 89 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, ஏனைய வீதிப் போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் 4,126 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
