Our Feeds


Saturday, August 15, 2026

Zameera

73 பாதாள உலகக் குழு உறுப்பினர்களை நாட்டிற்கு அழைக்க நடவடிக்கை


 வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள முக்கிய பாதாள உலக மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களில் சர்வதேச சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள 73 பேரை விரைவில் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று (15) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே பொலிஸ் மா அதிபர் இதனைத் தெரிவித்தார். 

மேலும் நூற்றுக்கு அருகாமையிலான நபர்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு திட்டத்தின் வெளிப்படைத்தன்மை மற்றும் முன்னேற்றம் காரணமாக, வெளிநாடுகள் மற்றும் தூதரகங்களின் சிறப்பு பாராட்டும், உயர் ஒத்துழைப்பும் இதற்கு கிடைத்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டினார்.

இந்த நடவடிக்கைகளை நிறுத்துமாறு எந்தவொரு வௌி அழுத்தங்களோ அல்லது அச்சுறுத்தல்களோ விடுக்கப்படவில்லை என்றும், சோதனைகளை தொடர்ந்து முன்னெடுக்குமாறு மட்டுமே கோரிக்கைகள் கிடைப்பதாகவும் பொலிஸ் மா அதிபர் இங்கு தெரிவித்தார்.

இருப்பினும், இந்த கடத்தல்களுக்கு பணம் முதலீடு செய்த மற்றும் உதவிய நபர்கள் தற்போது கடுமையாக கலக்கமடைந்துள்ளதாக அவதானிக்க முடிகிறது என்றும் பிரியந்த வீரசூரிய கூறினார்.

சில அரசியல்வாதிகள் தன்னை பற்றி வெளியிடும் கருத்துக்கள் குறித்து தனக்கு எந்த பயமும் இல்லை என்றும், எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள தான் தயாராக இருப்பதாகவும் பொலிஸ் மா அதிபர் இங்கு வலியுறுத்தினார்.

தான் எந்தவொரு சமூக அநீதியையோ அல்லது அழிவையோ செய்யாததால், சிறப்பு பாதுகாப்பு இல்லாமலும் நாட்டின் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு செல்ல முடியும் என்றும் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய கூறினார்.

மேலும், மக்களுக்கு சென்று பார்க்க முடியாத நிலை தனக்கு ஏற்படவில்லை என்றும், சமூகத்திற்கு பொய் கூறி அழிவை ஏற்படுத்திய அரசியல்வாதிகளுக்கே அத்தகைய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய,

"மேலும் 73 சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களை அழைத்து வர வேண்டியுள்ளது. மேலும் 100 பேர் வரை இருப்பதாக நம்பப்படுகிறது. அதேபோல் எங்களுக்கு நல்ல சர்வதேச ஒத்துழைப்பு கிடைத்துள்ளது. அத்துடன் நாங்கள் முன்னெடுக்கும் திட்டங்களின் வெளிப்படைத்தன்மை மற்றும் முன்னேற்றம் குறித்து வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் நாடுகள் சிறப்பு பாராட்டு தெரிவித்துள்ளன."

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »