Our Feeds


Friday, August 28, 2026

Zameera

ஓகஸ்ட் மாதத்தில் இதுவரை 9,469 டெங்கு நோயாளர்கள்


 இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 94,805 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. 


குறித்த தரவுகளின்படி, டெங்கு நோய் காரணமாக இதுவரை 72 பேர் உயிரிழந்துள்ளதாக பதிவாகியுள்ளது. 


ஓகஸ்ட் மாதத்தில் மாத்திரம் 9,469 டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதுடன், ஜூலை மாதத்தில் 29,962 நோயாளர்களும் ஜூன் மாதத்தில் 21,533 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர். 


மொத்த நோயாளர்களில் 52.92 சதவீதமானோர், அதாவது 50,167 நோயாளர்கள் மேல் மாகாணத்தில் மாத்திரம் பதிவாகியுள்ளனர். 


இதற்கு மேலதிகமாக, தென் மாகாணத்தில் 13,823 நோயாளர்களும் மத்திய மாகாணத்தில் 8,624 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர். 


மாவட்ட மட்டத்தில் அதிகளவான நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளதுடன், அதன் எண்ணிக்கை 20,207 ஆகும். 


அத்துடன், கொழும்பு மாவட்டத்தில் 18,794 நோயாளர்களும், கண்டி மாவட்டத்தில் 6,913 நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 6,117 நோயாளர்களும், காலி மாவட்டத்தில் 6,111 நோயாளர்களும் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 


நாடு முழுவதும் 76 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் தொடர்ந்தும் அதி-அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »