Our Feeds


Friday, August 28, 2026

Zameera

அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வருவதில் சட்டச் சிக்கல் – அமைச்சர் ஆனந்த விஜேபால


 (இராஜதுரை ஹஷான்)



மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வருவதில் சட்ட சிக்கல் காணப்படுகிறது. ஏனெனில் அவர் சிங்கப்பூர் நாட்டு பிரஜை. மாற்று சட்ட வழிமுறைகள் குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளோம் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.


தனியார் தொலைக்காட்சியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,


போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பாதாளக் குழுக்களுடன் தொடர்புடைய பிரதான குற்றவாளிகளை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த குறுகிய காலப்பகுதிக்குள் முக்கிய தரப்பினரை நாட்டுக்கு கொண்டு வந்துள்ளோம்.


39 நாடுகளில் தலைமறைவாகியுள்ள பிரதான குற்றவாளிகளை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு உரிய நடவடிக்கைகள் சர்வதேச மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இன்னும் ஓரிரு நாட்களில் பிரதான குற்றவாளி ஒருவர் நாட்டுக்கு அழைத்து வரப்படுவார்.



பிணைமுறி மோசடியின் குற்றவாளியான மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வருவதில் சட்ட சிக்கல் காணப்படுகிறது. ஏனெனில் அவர் சிங்கப்பூர் நாட்டு பிரஜை.தற்போது அவர் இலங்கை பிரஜையல்ல, ஆகவே சிங்கப்பூர் நாட்டின் சட்டத்தின் பிரகாரம் அந்நாட்டு பிரஜையை எம்மால் கைது செய்து நாட்டுக்கு அழைத்து வருவதில் சட்ட சிக்கல் காணப்படுகிறது.மாற்று சட்ட வழிமுறைகள் குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளோம்.தீவுகளை சுற்றிப்பார்த்தல்


உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்குகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளன. எதிர்வரும் மாதம் 22ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை அறிவிப்பதாக மேல் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.


குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் முறையான புலனாய்வு தகவல்கள் கிடைத்தும், அரசியல் நோக்கத்துக்காக தாக்குதல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லையா என்பது தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


பாதாளக்குழுக்களின் முக்கிய தரப்பினரை நாட்டுக்கு அழைத்து வந்ததன் பின்னர் அவர்களிடம் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஒருசில அரசியல்வாதிகள் கலக்கமடைவதை அவதானிக்க முடிகிறது.


ஊழல் மற்றும் படுகொலைகள் தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பில் எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு வாக்குமூலமளிக்க வந்து வெளியேறியதன் பின்னரே அவர்கள் வழமைக்கு மாறாக அரசாங்கத்துக்கு எதிராக பிரச்சாரம் செய்வார்கள். ஏனெனில் விசாரணைகளின் பின்னர் அடுத்து என்ன நேரிடும் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »