Our Feeds


Saturday, August 15, 2026

Zameera

காலநிலை மாற்றத்தால் சிறுவர்களுக்கு நோய் அபாயம் அதிகரிப்பு


 நாட்டின் சில பகுதிகளில் நிலவும் கடும் வெப்பநிலை மற்றும் ஏனைய பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்படும் வானிலை மாற்றங்களால் சிறுவர்களிடையே பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக சிறுவர் நல வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

அதிக வெப்பமான காலநிலை காரணமாக சிறுவர்கள், பெரியவர்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் நீர்ச்சத்து இழப்புக்கு உள்ளாகக்கூடிய வாய்ப்பு அதிகமாக இருப்பதால், போதுமான அளவு நீரை அருந்துமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

வயது வந்த ஒருவர் நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 3 லீற்றர் நீரை அருந்துவது பொருத்தமானது எனத் தெரிவித்த வைத்தியர், சிறுவர்களுக்கு அவர்களின் உடல் எடைக்கு ஏற்ப போதுமான அளவு நீரை வழங்குவதில் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நீண்டகாலமாக போதுமான அளவு நீரை அருந்தாமல் இருப்பது சிறுநீரகக் கோளாறுகளுக்கு வழிவகுக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், போதுமான அளவு நீர் அருந்தாமல் திறந்தவெளிகளில் பணியாற்றுதல் அல்லது சுற்றுலா செல்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும்போது வெப்ப அதிர்ச்சி, மயக்கம் மற்றும் வலிப்பு போன்ற கடுமையான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்றும், சில சந்தர்ப்பங்களில் அவை உயிரிழப்புக்கும் வழிவகுக்கலாம் என்றும் எச்சரித்துள்ளார்.

எனவே, வீட்டை விட்டு வெளியே செல்லும்போது நீர் போத்தல் ஒன்றை உடன் எடுத்துச் செல்லுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, தற்போதைய காலநிலை காரணமாக வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயமும் அதிகரித்துள்ளதால், சிறுவர்களுக்கு சுத்தமான குடிநீர் மற்றும் சுத்தமான உணவுகளை மட்டுமே வழங்குமாறு பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செயற்கை பானங்கள் மற்றும் நொறுக்குத் தீனிகளைத் தவிர்த்து, எலுமிச்சை, தோடம்பழம், இளநீர், கஞ்சி மற்றும் சூப் போன்ற இயற்கையான திரவ உணவுகளை சிறுவர்களுக்கு வழங்குமாறும் வைத்தியர் பரிந்துரைத்துள்ளார்.

மேலும், சிறுவர்கள் கைபேசிகளில் அதிக நேரத்தை செலவிடுவதைத் தவிர்த்து, அவர்களை உடற்பயிற்சி உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபடுத்துமாறும் பெற்றோரிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »