இந்திய வம்சாவளி மலையக தமிழர்களின் காணி உரிமை தொடர்பில், அரசு பேசிய பேசியே காலத்தை கடத்துகிறது. இப்போது புதிய, "மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகாரசபை” (Central Highlands Protection Authority) என்ற ஒரு புதிய புரளி-சபையை கொண்டு வந்து, “காலநிலை, மண்சரிவு, நீர் பிடிப்பு”, என்று விற்பனை ஆகும் சொற்களை சந்தை படுத்தி, ஒட்டு மொத்த பெருந்தோட்ட வாழ் மலையக தமிழருக்கும் காணி உரிமையை தந்திரமாக மறுக்கவும், அவர்களை வெளி பலான இடங்களில் குடியேற்றவும், தொடர்மாடி வீடுகளை கட்டி குடியேற்றவும், என்பிபி அரசு திட்டம் இடுகிறது.
இது இவர்களது பழைய ஜேவிபி கொள்கை. இதற்கு இவர்கள் இன்று, ஆசிய அபிவிருத்தி வங்கி, இலங்கை ஐநா அலுவலகம், ஆகிய சர்வதேச நிறுவனங்களை தந்திரமாக பயன்படுத்த முயல்கிறார்கள்.
காலநிலை, மண்சரிவு, நீர் பிடிப்பு, ஆகிய உன்னத விஷயங்களை தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரிக்கிறது. ஆனால், இவை எமது மக்களின் காணி உரிமைக்கு குந்தகம் விளைவிக்க முடியாது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், இலங்கையில் உள்ள ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) தேச இயக்குனர் ஷனென் கோவ்லின் தலைமையிலான வங்கி குழுவினரிடம் தெளிவாக தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று, ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கை அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில், மனோ கணேசனுடன், தமுகூ அரசியல் குழு உறுப்பினர்கள் பேராசிரியர் விஜயசந்திரன், சட்டத்தரணி பாரத் அருள்சாமி, பொறியிலாளர் பிரஜீவன் ஆகியோரும், ஏடிபி சார்பில் இயக்குனர் ஷனென் கோவ்லின், தேச செயற்பட்டு தலைவர் சொல்பொன் மம்பேடோவா உட்பட உயர் மட்ட குழுவினர் இடம் பெற்றனர்.
ஏடிபி குழுவினருக்கு மனோ எம்பி மேலும் கூறியுள்ளவை தொடர்பில், தமுகூ ஊடக அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூற பட்டுள்ளதாவது;
இலங்கையின் ஏனைய மக்களுடன் ஒப்பிடுகையில், மலையக மக்கள் வளர்ச்சி குன்றிய பிரிவினர். இதற்கு வரலாற்று காரணங்கள் உள்ளன. எமது மக்களுக்கு 2003 ஆண்டு தான் கடைசி தொகுதி குடியுரிமையே கிடைத்தது.
ஆகவே நாம் ஆரம்பித்த புள்ளி தாமதம் ஆனது. ஆகவே வளர்ச்சியும் தாமதம் ஆனது. இன்று எமது குடியுரிமை முழுமை அடைய வேண்டும் என்றால், எமது காணிக்கான உரிமை உறுதி படுத்த பட வேண்டும். காணி உரிமை இல்லாவிட்டால், எமது குடியுரிமை முழுமை அடையாது. அது கிடைத்தால், ஏனைய உரிமைகள் படிப்படியாக வந்து சேரும்.
இன்று ஆளும் அரசு, “மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகாரசபை” (Central Highlands Protection Authority) என்ற புதிய யோசனையை முன்வைத்து, சட்டபூர்வமாக அதை உருவாக்க முனைகிறது. இதன் மூலம், மலைநாட்டு காலநிலை, மண்சரிவு, நீர் பிடிப்பு, ஆகிய விஷயங்களுக்காக இதை செய்ய போவதாகவும், அதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி உதவ போவதாகவும் கூறுகிறது.
மலைநாட்டின் நீர்வளங்கள், காடுகள், உயிரியல் பன்முகத்தன்மை மற்றும் சூழலியல் அமைப்புகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை.
ஆனால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற பெயரில் மக்களின் வாழ்விட உரிமையும் காணி உரிமையும் பறிக்கப்படக்கூடாது. அதுவே இன்று நாம் கேட்க வேண்டிய முக்கியமான கேள்வியாகும்.
மலையக மக்கள் பாரம்பரியமாக சில பெருந்தோட்ட மாவட்டங்களில் மட்டுமே வாழ்கின்றனர் என்ற தவறான அணுகுமுறையை அரசு கவனத்தில் கொள்கிறது. உண்மையில், மலையக மக்கள் 12-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பரவலாக வாழ்கின்றனர்.
நுவரெலியா, கண்டி, பதுளை ஆகிய மாவட்டங்களுடன், இரத்தினபுரி, கேகாலை, மாத்தளை, மொனராகலை, கொழும்பு/அவிசாவளை, களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் குருநாகல் உள்ளிட்ட கீழ் நாட்டு மாவட்டங்களிலும் அவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
அரசாங்க கட்சியான ஜேவிபி, மலையக மக்களின் காணி உரிமைக்கான கோரிக்கையை சித்தாந்தரீதியாக பாரம்பரிரயமாக நிராகரித்து வந்ததுடன், அதற்கு பதிலாக பெருந்தோட்டக் காணிகளை மீளக் காடாக்கும் (reforestation) கருத்தை முன்னிறுத்தி வந்துள்ளது. இந்த திட்டத்தின் பின்னணி இதுவா? என்ற பலத்த சந்தேகம் எமக்கு எழுந்துள்ளது.
நுவரெலியா, கண்டி மற்றும் பதுளை மாவட்டங்களில் சில மலை உச்சி பகுதிகளும் சுற்றுச்சூழல் ரீதியாக உணர்திறன் கொண்ட பகுதிகளும் உயர் மலைநாடு (Highlands) என அடையாளப்படுத்த பட்டு பாதுகாக்கப்பட வேண்டியிருக்கலாம். ஆனால், முழு பெருந்தோட்ட பகுதிகளையும் பாதுகாக்க பட்ட காணிகளாக கருதுவது, மலையக மக்களின் நியாயமான காணி உரிமையை மறுக்கும் நிலைக்கு கொண்டு செல்லக்கூடும்.
எமது தலையீடுகளின் விளைவாக, பெருந்தோட்டங்களில் வீடமைப்பதற்காக இந்திய அரசாங்கம் நிதியுதவி வழங்குவதற்கு இணங்கியுள்ளது. நிதி தயாராக உள்ளது. ஆனால் காணி வழங்கப்படவில்லை. பெருந்தோட்ட நிறுவனங்களால் காணி விடுவிக்கப்படாததற்கு அடிப்படையான காரணம், மலையக மக்களின் காணி உரிமை தொடர்பாக அரசாங்கத்திடம் இன்னமும் தெளிவான கொள்கை இல்லாததே ஆகும்.
கீழ்நாட்டு பெருந்தோட்டங்களில் வாழும் மலையக குடும்பங்களுக்கு வீடமைப்பிற்கான காணி துண்டுகளை உடனடியாக ஒதுக்குமாறு அரசாங்கத்தை நாம் வலியுறுத்துகிறோம்.
நுவரெலியா, கண்டி மற்றும் பதுளை மாவட்டங்களின் மலை உச்சி பகுதிகளை தவிர்த்து, நெடுஞ்சாலைகளுக்கு அருகாமையில் பாதுகாப்பான இடங்களில் வீடமைப்பிற்கான காணிகளை வழங்குமாறு அரசாங்கத்திடம் நாம் கோருகிறோம்.
மேலும் பாதுகாப்பான குடியிருப்புகளை பற்றி பேசும் அரசு, மலைகளில், தொடர்மாடிகள் கட்டி, எமது மக்களை அங்கே குடியமர்த்த போடும் திட்டம்களையும் நாம் நிராகரிக்கிறோம்.
இது உட்பட, சிறுபான்மை சமூகத்தின் காணி உரிமை, வாழ்விட உரிமை, ஆகியவற்றை உதாசீனம் எந்தவித முயற்சிக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி துணை போய் விட கூடாது. உங்கள் நல்லெண்ண உதவிகள் முறையற்று பயன்படுத்த இடம் கொடுத்து விட கூடாது.
இது பற்றி தெளிவு படுத்த, நான் எமது குழுவினருடன், இலங்கை ஐநா வதிவிட பிரதிநிதியை மீண்டும் சந்திக்க உள்ளேன். ஏனைய சர்வதேச பிரதிநிதிகளையும் சந்திக்க உள்ளேன்.
மது முன்வைப்புகளை செவி மடுத்த, ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) தேச இயக்குனர் ஷனென் கோவ்லின் தலைமையிலான குழுவினர், இந்த முக்கிய விவகாரங்களை தம் கவனத்துக்கு கொண்டு வந்தமைக்காக, தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு நன்றி தெரிவித்தனர். சிறுபான்மை மக்களின் காணி, கலாச்சார உரிமைகளை மறுக்கும் எந்த ஒரு நடவடிக்கைக்கும் தமது நிறுவனம், ஒருபோதும் துணை போகாது என்றும், இவற்றை தாம் அரசுடன் முன்னேடுக்கும் திட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் கவனம் செலுத்துவதாகவும் உறுதி அளித்தனர்.
