கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து சென்றிருந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து ‘ஹைட்ரஜன் பெரோக்சைட்’ இரசாயனத்தை அருந்தியதில் உயிரிழந்துள்ளார்.
வவுனியா, செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த தினேஸ்காரம் ஹயனிகா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பான மரண விசாரணை நேற்று (24) கம்பளை வைத்தியசாலையில் இடம்பெற்றபோது இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 23ஆம் திகதி இரவு சுமார் 8 மணியளவில் சிறுமிக்கு தாகம் ஏற்பட்டுள்ளது. இதன்போது வீட்டின் ஜன்னல் படியில் வைக்கப்பட்டிருந்த போத்தலில் இருந்த திரவத்தை தண்ணீர் என நினைத்து சிறுமி அருந்தியதாக மரண விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமி இரசாயனத்தை அருந்தியதைத் தொடர்ந்து அவரது வாயிலிருந்து நுரை வெளியேறியதாகவும், உடனடியாக பன்விலதென்ன வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றபோதிலும், சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் அவரது தந்தை வாக்குமூலம் அளித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
