Our Feeds


Sunday, August 16, 2026

SHAHNI RAMEES

தாங்க முடியல! | CID-இல் புகார் அளிக்க வந்த கெமுனு விஜேரத்ன!




நான் ஒரு புகாரை அளிக்க வந்தேன். குறிப்பாக, சமூக வலைத்தளங்களில் என்னை இந்த மெட்ரோ பஸ் விவகாரத்துடன் இணைத்துத் தொடர்ந்து தாக்கி, அவதூறு பரப்பி வருகிறார்கள். கடந்த சில நாட்களாக இது நின்றுவிடும் என்று பொறுமையுடன் காத்திருந்தேன்.


ஆனால் இது நிற்கவில்லை; தொடர்ந்து அவதூறுகள் பரப்பப்பட்டு வருகின்றன. நேற்றைய தினமும் கூட சில சமூக ஊடகங்களில் ஒரு நிகழ்ச்சியை நடத்தியிருந்தார்கள்.


நான் அவற்றைப் பார்ப்பதில்லை. ஆனால் எனது பேருந்து உரிமையாளர்கள், சங்க உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் இதைக் கேட்டு, "தலைவரே, இதற்கு ஏதாவது நடவடிக்கை எடுக்கக் கூடாதா?" என்று கேட்கிறார்கள்.


வழக்கமாக நான் இவற்றைப் பொருட்படுத்துவதில்லை. ஏதாவது ஒன்றை தாங்கிக்கொள்ளும் சக்தி இருந்தால், அதை சகித்துக்கொள்வதுதான் நல்ல பண்பு.


கடந்த நாட்களில் நான் அதை சகித்துக் கொண்டுதான் இருந்தேன், பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், வெளியில் இருந்து வந்த அழுத்தங்கள் காரணமாகவும், உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்றுமே நான் இந்தப் புகாரைப் பதிவு செய்ய வேண்டியதாயிற்று.


போக்குவரத்து என்பது ஒரு மிகப்பெரிய பாடம். அதை அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு பாடமாகப் பள்ளிகளிலேயே இதைக் கற்பிக்க வேண்டும்.


ஆனால் துரதிர்ஷ்டவசமாக, வெளிப்புற தோற்றத்தை மட்டும் பார்த்துக்கொண்டு பலர் இதை விமர்சிக்கிறார்கள். இது மிகவும் வருத்தத்திற்குரியது.


இந்த இளைஞர்களைப் பார்க்கும்போது, இவர்கள் மழைக்காவது பள்ளிக்குச் சென்றிருப்பார்களா என்ற கேள்வி எழுகிறது. இளைஞர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் என்னிடம் கேட்கலாம்.


இலங்கையில் போக்குவரத்து தொடர்பான முதல் புத்தகத்தை 2004-இல் நான் தான் எழுதினேன். பின்னர் 2013-இல் இரண்டாவது புத்தகத்தை எழுதினேன். போக்குவரத்து என்பது மிகவும் ஆழமான ஒரு துறை.


என்னைக் கேலியாக 'பஸ் கெமுனு' என்று அழைக்கிறார்கள். எனக்கு 'கெமுனு விஜேரத்ன' என்று ஒரு பெயர் இருக்கிறது. ஒரு மனிதனுக்குக் கொடுக்க வேண்டிய குறைந்தபட்ச மரியாதையைக் கொடுக்க வேண்டும்.


இதுபோன்ற தரமற்ற கருத்துக்கள் எனது மனதை தொடர்ந்து வேதனைப்படுத்துகின்றன. இதனால்தான் நான் இன்று CID-இல் புகார் அளிக்க வந்தேன்.


மெட்ரோ பஸ் திட்டம் என்பது புதிதாக வந்த ஒன்றல்ல. 2023 பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு, இதற்கான ஒரு திட்ட அறிக்கையை போக்குவரத்து அமைச்சகத்திடம் சமர்ப்பித்திருந்தேன்.


 சீன எக்ஸிம் வங்கியின் (Exim Bank) கடனுதவியுடன் இத்திட்டத்தைச் செயல்படுத்த நினைத்தோம். மக்கள் செலுத்தும் வரிப் பணத்தில் இதைச் செய்ய முயலவில்லை. ஆனால் அன்றைய அமைச்சர் பந்துல குணவர்தன அதற்கு ஆதரவளிக்கவில்லை.


அனைத்து அரசாங்கங்களாலும் நான் பாதிக்கப்பட்டிருக்கிறேன். கடந்த கால அமைச்சர்கள் பெரிய பஸ் உரிமையாளர்களுடன் உடன்பாடுகளைச் செய்துகொண்டு இத்துறையை வீழ்ச்சியடையச் செய்தனர்.


நான் இந்த மெட்ரோ பஸ் கருத்தாக்கத்திற்கு (Concept) எதிரி அல்ல. ஆனால் CTB (SLTBP) என்பது நாளொன்றுக்கு 2 கோடி ரூபாய் நஷ்டமடையும் ஒரு நிறுவனம்.


நான் 40 வருடங்களாக அரசாங்கத்திற்கு வரி செலுத்தி வருகிறேன். எனவே, மக்களின் வரிப் பணம் வீணடிக்கப்படுவதைக் கண்டித்துக் கேட்க எனக்கு உரிமை உண்டு.


10 ஆண்டுகளுக்கு முன்பே லேலண்ட் நிறுவனத்திடமிருந்து 60 'லோ ஃபளோர்' (Low-floor) பஸ்கள் கொண்டுவரப்பட்டன. ஆனால் அவை தோல்வியடைந்ததால், நெடுஞ்சாலைகளில் (Expressway) இயக்கப்பட்டன.


பணாகொட லேலண்ட் நிறுவனத்திற்குச் சென்று பாருங்கள், இன்னமும் 20 பஸ்கள் அப்படியே நிற்கின்றன. இவற்றிற்கு சூப்பர் டீசல் தேவை. ஒரு லிட்டருக்கு 1.5 முதல் 2 கி.மீ மட்டுமே ஓடும்.


இவ்வளவு நஷ்டத்தில் பஸ்களை இயக்குவது சாத்தியமில்லை. மக்களிடமும் இப்போது அதிக பணம் இல்லை, பஸ் கட்டணத்தை உயர்த்தினால் மக்கள் நடந்து செல்லத் தொடங்கிவிடுவார்கள்.


தொழில்முறை அடிப்படையில் சிலர் திட்டமிட்டே என்னை வீழ்த்த இத்தகைய சமூக ஊடகத் தாக்குதல்களை நடத்துகிறார்கள் என்று நினைக்கிறேன்.


ஆனால் நான் எதற்கும் அஞ்சப்போவதில்லை. நாட்டிற்காகவே குரல் கொடுக்கிறேன்.


பொதுமக்களின் வரிப்பணத்தை வீணாக்காதீர்கள் என்பதே எனது ஒரே கோரிக்கை.


தினமும் 2 கோடி நஷ்டமடையும் ஒரு நிறுவனம் இத்தகைய திட்டங்களைச் செயல்படுத்தினால், எதிர்காலத்தில் நஷ்டம் 4 கோடியாக உயரும்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »