உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புப் பிரதி பொலிஸ்மா அதிபருக்குக்
கிடைக்கும் வரை, பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, 2019 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு செல்லுபடியற்றது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட குறித்த ஜனாதிபதி பொதுமன்னிப்பை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை பரிசீலித்த பின்னரே உயர்நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவியான சந்தியா எக்னலிகொட மற்றும் மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் ஆகியவற்றினால் இந்த அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
