ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டில் நாங்களும் உறுதியாக
உள்ளோம். அரச நிதியை கொள்ளையடித்தவர்கள்,இலஞ்சம் பெற்றவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. 13 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற எயார் பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் பிறிதொரு நாட்டில் இருந்துக் கொண்டு நிமல் பெரேரா என்ற நபர் வழங்கிய சாட்சியத்துக்கு அமைய நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டமை முற்றிலும் தவறானது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி பொலன்னறுவையிலும் அநுராதபுரத்திலும் ஆற்றிய இரு உரைகளையும் செய்திகளில் பார்த்தேன். அவர் நாட்டின் ஜனாதிபதி என்ற ரீதியில் நாட்டைக் பற்றிப் பேசாமல், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் அதன் தலைவர்களைப் பற்றியே பேசுகிறார். அதைப் பற்றி எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் தருணத்தில், நாடு முழுவதும் கூட்டங்களை நடத்தி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவையும் அதன் தலைவர்களையும் விமர்சித்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றால், ஜனாதிபதி தோல்வியை ஏற்றுக்கொண்டார் என்றே கருத முடியும்.
அரசாங்கத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை இருப்பதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார். அவ்வாறாயின் மாகாணசபைத் தேர்தலை உடன் நடத்தலாம் தானே, தேர்தல் முறைமையை குறிப்பிட்டுக் கொண்டு தேர்தலை பிற்போட வேண்டியதன் நோக்கம் என்ன, மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை. அரசியல் பழிவாங்கல் நிகழ்ச்சி நிரலுக்கு அமையே அரசாங்கம் செயற்படுகிறது.
ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டில் நாங்களும் உறுதியாக உள்ளோம். அரச நிதியை கொள்ளையடித்தவர்கள், இலஞ்சம் பெற்றவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது.
13 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற எயார் பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் பிறிதொரு நாட்டில் இருந்துக் கொண்டு நிமல் பெரேரா என்ற நபர் வழங்கிய சாட்சியத்துக்கு அமைய நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டமை முற்றிலும் தவறானது.
நாமல் ராஜபக்ஷ இலஞ்சம் பெற்றார் என்ற குற்றச்சாட்டில் தான் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவருக்கு இலஞ்சம் வழங்கியதாக குறிப்பிட்ட நபருக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அரசியல் பழிவாங்களையும் எமது எதிர்கால வெற்றியை தடுப்பதற்காகவுமே நாமல் ராஜபக்ஷ இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இது முற்றிலும் தவறான செயற்பாடு என்றார்.
