சீனாவிலிருந்து உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஈரானின் கும் நகரில் பெப்ரவரி 13ம் திகதிக்கு முன்னரே ஒரு வாரத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளதாக ஈரானிய அதிகாரி அஹ்மத் பராஹனி என்ற அதிகாரியை மேற்கோள் காட்டி ILNA சர்வதேச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறித்த நகரில் இதுவரை 250க்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சையளித்து வருவதாக குறித்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஈரானின் ஷீயா மத கற்கைகளுக்கு பிரபலமான இந்த நகரில் பல வெளிநாட்டு மாணவர்களும் தம் கற்கைகளை தொடர்கிறார்கள்.
பெப்ரவரி 19ம் திகதிதான் தனது நாட்டின் முதல் கொரோனா நோயாளி மரணித்தார் என ஈரான் தெரிவித்த நிலையில் அதற்கு ஒரு வாரத்திற்கு முன்னரே 50 பேர் உயிரிழந்தள்ள அதிர்ச்சியான செய்தி தற்போது வெளியாகி பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
ஈரானுக்கு பயணித்த தமது நாட்டை சேர்ந்த மூவருக்கு கொரோனா தாக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறி குவைத் ஈரானுடனான தனது எல்லையை மூடியுள்ளது. தம் நாட்டை சேர்ந்த 750க்கும் மேற்பட்டவர்களை வெளியேற்றவும் குவைத் ஏற்பாடுகளை செய்துள்ளது.
