சவுதி அரேபியாவில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து கொரோனாவை எதிர்கொள்ள சவுதி அரேபியா முழு வீச்சில் தயாராகி வருகிறது.
ஈரானுக்கு சென்ற ஒருவர் பஹ்ரைன் வழியாக சவுதி வந்த நிலையிலேயே அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் குறித்த நபர் தான் ஈரான் சென்றதை ஆரம்பத்தில் மறைத்தமை குறிப்பிடத் தக்கதாகும்.
298 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் நடத்தப்பட்ட பரிசோதனைகளில் ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று சவுதி தெரிவித்திருந்த நிலையிலேயே தற்போது ஒருவர் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.
கொரோனாவை எதிர்கொள்ள 25 மருத்துவ மனைகளை தயார் நிலையில் வைத்துள்ளது சவுதி அரேபியா.
கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கவென 2200 படுக்கைகளையும் தயார் நிலையில் சவுதி வைத்துள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், சிங்கப்பூர், ஈராக், ஈரான், ஜப்பான், கொரியா, இத்தாலி மற்றும் சீனாவிலிருந்து சவுதிக்கு சுற்றுலா விசா விண்ணப்பிப்பவர்களுக்கு விஸா வழங்குவதற்கு சவுதி தற்காலிக தடை விதித்துள்ளது.
ஏற்க்கனவே உம்றா புனித யாத்திரைக்கும் சவுதி தடை விதித்துள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.
சீனா மற்றும் ஈரானுக்கு சென்று திரும்பியவர்கள் 14 நாட்களின் பின்னரே நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் சவுதி அறிவித்துள்ளது.
