தென்கொரியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து தடுப்பு நடவடிக்கையாக, சில சமூக இடைவெளி கட்டுப்பாடுகள் இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு அமுலுக்கு வரவுள்ளது.
கொரோனா தொற்றை வெற்றிகரமாக கட்டுப்படுத்தி உலகிற்கே முன்னுதாரணமாக மாறிய தென்கொரியா, கடந்த மே 6ம் தேதி சமூக இடைவெளி கட்டுப்பாடுகளை தளர்த்தியது.
மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பிய நிலையில், தற்போது மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த ஏப்ரல் 5ம் தேதி கடைசியாக 81 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு பதிவானது.
இந்நிலையில், வியாழன் அன்று ஒரே நாளில் புதிதாக 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மொத்த பாதிப்பு 11,344 ஆக அதிகரித்துள்ளது.
சியோலுக்கு மேற்கே புச்சியோனில் உள்ள நிறுவனமான கூபாங்கின் கிடங்கில் 69 கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டதாக கொரிய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிலையம் தெரிவித்துள்ளது.
அந்த கட்டடத்தில் இருந்த தொழிலாளர்கள் உட்பட 4,100 பேர் சுய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர். 80 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
'கொரோனா சோதனைகளை நாங்கள் முடிக்கும் வரை, கிடங்குடன் தொடர்புடைய புதிய தொற்று பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயரும் என்று எதிர்பார்க்கிறோம்," என தென்கொரிய துணை சுகாதாரத்துறை அமைச்சரான கிம் கேங் லிப் தெரிவித்துள்ளார்.
தென்கொரியாவில் மக்கள் தொகையில் பாதியளவு கொண்ட சியோலின் பெருநகர பகுதிகளில் கொரோனா பாதிப்பு புதிதாக ஏற்பட்டுள்ளது. இது சமூக இடைவெளியை மீண்டும் அமுல்படுத்த அதிகாரிகளை தூண்டியுள்ளது.
அருங்காட்சியங்கள், பூங்காக்கள் மற்றும் ஓவிய கூடங்கள் உள்ளிட்டவை மீண்டும் வெள்ளி முதல் இரண்டு வாரங்களுக்கு மூடப்படுமென சுகாதார அமைச்சர் பார்க் நியூங்ஹ தெரிவித்துள்ளார்.
மற்ற நடவடிக்கை உடன், நிறுவனங்கள் மாற்றி கொள்ள கூடிய வேலை நேரத்தை மறுபடியும் அறிமுகப்படுத்தவும் கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.
'இன்று முதல் ஜூன் 14 வரை இரண்டு வாரங்களுக்கு மாநகர பகுதியில் உள்ள அனைத்து தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளையும் வலுப்படுத்த முடிவு செய்துள்ளோம்.
பார்கள், உணவகங்கள் உள்ளிட்ட கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம். மத வழிபாட்டு தலங்களில் தனிமைப்படுத்தல் நடவடிக்கையுடன் கூடுதல் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுகொள்ளப்பட்டுள்ளனர்.
பாடசாலைகளை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், புதிதாக தாமதங்கள் எதுவும் இருக்காது. பெருநகர பகுதிகளில் அடுத்த 2 வாரங்கள் கொரோனா தொற்று பரவாமல் தடுப்பது மிகவும் முக்கியமானதாகும். இதில் தோல்வியடைந்தால் மீண்டும் சமூக இடைவெளிக்கு திரும்ப வேண்டியிருக்கும்.
குறைந்தபட்சம் தொடர்ச்சியாக 7 நாட்கள் 50க்கும் மேற்பட்ட புதிய தொற்று பாதிப்புகள் ஏற்பட்டால், அனைத்து சமூக இடைவெளி கட்டுப்பாடுகளை மீண்டும் அரசு அமல்படுத்த நேரிடுமென" அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா பரவ துவங்கிய போது, சீனாவுக்கு வெளியே கொரோனா தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக தென்கொரியா விளங்கியது. தீவிர ஊரடங்கை அமல்படுத்தப்படவில்லை என்றாலும், மார்ச் முதல் சமூக இடைவெளியை பரவலாக பின்பற்றியது.
கொரோனா தடமறிதல், பரிசோதனை மற்றும் சிகிச்சை என்ற அடிப்படையில் தென்கொரியா, கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்திருந்தது.
