(க.சரவணன்)
மட்டக்களப்பின் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதியிலுள்ள மருத்துவ ஆய்வுகூடம் ஒன்றின் தாதி மீது பாலியல் சேட்டைக்கு முயற்சித்த குற்றச்சாட்டில் இரத்த பரிசோதனைக்கு சென்ற இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து எதிர்வரும் முதலம் திகதி சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் புதன்கிழமை உத்தரவிட்டார்.
குறித்த பிரதேசத்திலுள்ள மருத்துவ ஆய்வுகூட நிலையம் ஒன்றில் சம்பவதினமான செவ்வாய்க்கிழமை அதிகாலை 6 மணிக்கு இரத்த பரிசோதனைக்கு சென்ற 27 வயதுடைய இளைஞர் இரத்தத்தை பரிசோதனைக்காக ஊசிமூலம் எடுத்த பெண் தாதி மீது பாலியல் சேட்டை விட முயற்சித்துள்ளார்.
இதனையடுத்து குறித்த பெண் தாதி பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞராவார்.
