(எம்.எப்.எம்.பஸீர்)
‘எக்ஸ்பிரஸ் பேர்ள் ‘ சரக்குக் கப்பலின் தீ பரவல் மற்றும் அதனுடன் தொடர்புடைய சம்பவங்கள் காரணமாக இலங்கையர்களின் வாழ்வாதாரம் மற்றும் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களுக்காக, அக்கப்பலின் உரிமை நிறுவனமான எக்ஸ்பிரஸ் பீடர்ஸ் வருத்தம் தெரிவித்துள்ளதுடன் மன்னிப்பும் கோரியுள்ளது.
‘ இந்தச் சம்பவத்தால் இலங்கையர்களின் வாழ்வாதம் மற்றும் அவர்களது சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து இலங்கையர்களுக்கு எனது வருத்ததை தெரிவிக்க விரும்புகிறேன். அத்துடன் மன்னிப்பும் கோருகிறேன்.’ என கப்பல் உரிமை நிறுவனமான சிங்கப்பூரின் எக்ஸ்பிரஸ் பீடர்ஸ் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி ஷுமெல் யோஸ்கோவ்டிஸ் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் செனல் நியூஸ் ஏஷியா தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள செவ்வ்வியிலேயே, தனது வருத்தத்தை தெரிவித்து மன்னிப்பு கோருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இலங்கைக்கு நட்டஈடு வழங்குவது தொடர்பாக குறித்த தொலைக்காட்சி வினவிய கேள்வியொன்றுக்கு பதிலளித்துள்ள எக்ஸ்பிரஸ் பீடர்ஸ் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி ஷுமெல் யோஸ்கோவ்டிஸ்,
நட்ட ஈடு தொடர்பில் பேசி வருவதாகவும் , கப்பல் தற்போது மூழ்கிவரும் நிலையில், அது முழுமையாக மூழ்கிய பின்னரேயே அடுத்த கட்டம் தொடர்பில் பேச முடியும் என குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தற்போதும் இலங்கையுடன் இணைந்து செயற்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், கடற்கரைகளை சுத்தம் செய்வதற்கான உபகரணங்கள் பலவற்றையும் கொடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளதுடன், நட்ட ஈடு தொடர்பில் நேரடி சாதக பதில்களை வழங்கியிருக்கவில்லை.
