(எம்.மனோசித்ரா)
கொவிட் -19 தடுப்பூசியையும் எதிர்த்து பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடும் என கருதப்படுகின்ற புதிய கொவிட் -19 பிறழ்வு தென் ஆபிரிக்காவில் இனங்காணப்பட்டுள்ளது.
தென் ஆபிரிக்காவின் தொற்று நோய் தொடர்பாக ஆராயும் ஆராய்ச்சி நிறுவனம் இந்த புதிய பிறழ்வு தொடர்பில் அறிவித்துள்ளதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் மூலக்கூறு உயிரியல் துறையின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை செய்துள்ள கலாநிதி சந்திம ஜீவந்தர , ‘ தொற்று நோய்களின்போது இவ்வாறு புதிய பிறழ்வுகள் வெளிப்படுவது இயல்பானது. இந்த பிறழ்வின் சேர்க்கைகள் ஏனைய வைரஸின் பாகங்களை விட மாற்றமடைந்தமாகும்.’ என்று குறிப்பிட்டுள்ளார்.
C.1.2. என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பிறழ்வு N440K மற்றும் Y449H என்ற மாற்றங்களையும் காண்பிப்பதாக மேற்கூறப்பட்ட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் கொவிட் -19 தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காக வழங்கப்படும் தடுப்பூசி மனிதர்களின் உடலில் ஏற்படும் நோய் எதிர்ப்பு சக்தியையும் மீறி செயற்படக் கூடியது என்றும் தெரிவித்துள்ளார்.
