Our Feeds


Thursday, December 30, 2021

ShortNews

அடுத்த ஆண்டில் பாரிய அளவில் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு ஏற்படப் போகின்றது - மத்திய வங்கி முன்னாள் பிரதி ஆளுனர் எச்சரிக்கை



எம்மிடம் இருக்கும் வெளிநாட்டு கையிருப்பு மற்றும் எமக்கு கிடைக்கவுள்ள கடன்களை கொண்டு 2022ஆம் ஆண்டில் வெறுமனே இரண்டரை வாரங்களுக்கு தேவையான இறக்குமதியை மட்டுமே மேற்கொள்ள முடியும். 


எனவே அடுத்த ஆண்டில் பாரிய அளவில் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாட்டு நிலையொன்று உருவாகப்போகின்றது என மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் டப்ளியூ. ஏ.விஜேவர்தன தெரிவித்தார். 

யாருமே எதிர்பாராத விதமாக தேசிய நிதி நெருக்கடிக்கு வங்கிகள் முகங்கொடுத்து வருகின்றது என்பதையும் அவர் வெளிப்படுத்தினார்.

நிதி நெருக்கடி நிலைமைகள் மற்றும் 2022 ஆம் ஆண்டுக்கான சவால்கள் குறித்து கருத்துக்களை பரிமாற்றிக்கொண்ட போதே இவற்றை தெளிவுபடுத்தினார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

இப்போது நாம் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியாது போனால் எதிர்காலத்தில் சகல அத்தியாவசிய பொருட்களுக்கும் வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்படும். இப்போதே எமது வெளிநாட்டு கையிருப்பு பாரிய அளவில் வீழ்ச்சி கண்டுள்ளது. 

நவம்பர் மாத கணிப்பின்படி 1.6 பில்லியன் அமெரிக்க டொலர்களே எம்மிடம் உள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. இவற்றில் எம்மால் பயன்படுத்தக்கூடிய திரவ நிதியாக 1.1 பில்லியன் அமெரிக்க டொலர்களே உள்ளன. 

2022 ஆம் ஆண்டு இறக்குமதிக்கான தேவைகளுடன் இதனை ஒப்பிட்டுப்பார்த்தால் வெறுமனே இரண்டரை வாரங்களுக்கு தேவையான இறக்குமதியை மேற்கொள்ள மட்டுமே எமது கையிருப்பு போதுமானதாகும். 

எனவே அடுத்த ஆண்டில் பாரிய அளவில் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாட்டு நிலையொன்று உருவாகப்போகின்றது.  

அரசாங்கம்  இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து கடன்களை பெற்றுக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனை வைத்தே இந்த ஆண்டு இறுதிக்குள் வெளிநாட்டு கையிருப்பை மூன்று பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்க முடியும் என எதிர்பார்க்கின்றனர். இவ்வாறு பெற்றுக்கொள்ளும் கடன்களினால் எமது தூய வெளிநாட்டு கையிருப்பு அதிகரிக்கப்போவதில்லை. 

எனவே 2022 ஆம் ஆண்டு ஜனவரியில் செலுத்த வேண்டிய சர்வதேச கடன்கள், அரச வங்கிக் கடன்கள், தனியார் கடன்கள் மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கான நிதி என்பவற்றை கருத்தில் கொண்டால் அடுத்த ஆண்டு ஆரம்பமே எமக்கு நெருக்கடியுடன் ஆரம்பிக்கப்போகின்றது என்பதை மறுக்க முடியாது.

இலங்கையின்  தேசிய வங்கிகளில் தற்போது ரூபாவிற்கான தட்டுப்பாடும்  ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு இறக்குமதிக்கு வழங்க வேண்டிய பணத்தை வழங்கிய பின்னர் பிரதான இரண்டு அரச வங்கிகளிலும் பாரிய அளவில் ரூபாவிற்கான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 

அதற்கமைய முழு வங்கிக்கட்டமைப்பிலும் ஒரு நாளுக்கான ரூபாவின் பற்றாகுறையானது 450 பில்லியன் ரூபாவாக காணப்படுவதாக தரவுகள் மூலம் வெளிப்படுகின்றது. 

தேசிய நிதி விடயத்தில் யாருமே கவனத்தில் கொள்ளாத விதமாக நெருக்கடி நிலைமையொன்று உருவாகிக்கொண்டுள்ளது. ஒருபுறம் அரசாங்கத்திற்கு கடன்களை கொடுத்து அரசாங்கத்தை கொண்டு நடத்தவும், மறுபுறம்  வங்கிகளுக்கு கடன்களை கொடுத்து வங்கிகளை கொண்டு நடத்தவும் வேண்டிய இக்கட்டான நிலைக்கு மத்தியவங்கி தள்ளப்பட்டுள்ளது. 

இதுவே நாட்டின் பாரிய நிதி நெருக்கடிக்கான வெளிப்பாடாக நாம் அவதானிக்கின்றோம். ஆகவே உடனடியாகவும் அவசியமாகவும் எடுக்க வேண்டிய தீர்மானங்களை எடுத்தாக வேண்டியுள்ளது.

இப்போது சீனாவிடம் இருந்து 10 பில்லியன் யுவான் கடன்களை பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த கடன்களுக்கு நிகராக 300 பில்லியன் ரூபாவை நாம் சீன வங்கிக்கணக்கில் வைப்பிலிட வேண்டும். அதேபோல் சீன யுவானை எம்மால் டொலராக மாற்றிக்கொள்ள முடியாது. 

எனவே இந்த 10 பில்லியனையும் கொண்டு சீனாவில் இருந்து பொருட்களை கொள்வனவு செய்ய மட்டுமே பயன்படுத்த முடியும். அதேபோன்றுதான்  இந்தியாவில் இருந்து பெற்றுக்கொள்ளும் கடன்களிலும் எம்மால் இந்தியாவில் இருந்து பொருட்களை கொள்வனவு செய்வதற்கான வாய்ப்புகள் மட்டுமே உள்ளன. 

வேறு நாடுகளிடம் இருந்து எம்மால் எதனையும் கொள்வனவு செய்ய முடியாது. எனவே 2022 ஆம் ஆண்டு முழு இலங்கை மக்களும் தியாகம் செய்ய தயாராக வேண்டும். ஜனாதிபதியில் இருந்து கீழ்மட்ட குடிமகன் வரையில் சகலரும் தியாகம் செய்ய வேண்டும் என்றார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »