(எம். செல்வராஜா, பதுளை நிருபர்)
வெளிநாட்டு உல்லாச பயணியான 40 வயது பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்தார் என்ற சந்தேகத்தில் ஆட்டோ சாரதி ஒருவரை எல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
எல்ல நகரிலிருந்து கரந்தகொல்லை உல்லாச விடுதிக்கு செல்வதற்கு அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், ஆட்டோ ஒன்றில் சென்றபோதே, ஆட்டோ சாரதி மனித சந்தடி இல்லாத இடத்தில் ஆட்டோவை நிறுத்திவிட்டு, குறித்த பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயன்றுள்ளார்.
ஆட்டோ சாரதியின் பிடியிலிருந்த தப்பியோடிய குறித்த பெண் எல்ல பொலிஸ் நிலையத்துக்குச் சென்று, தனக்கேற்பட்ட நிலை குறித்து முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து எல்ல பொலிஸார் சந்தேகத்தின் பேரில் ஆட்டோ சாரதியைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஆட்டோ சாரதி விசாரணையின் பின்னர் பண்டாரவளை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென்று, எல்ல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உபேந்திர வாசனா அபேகுணவர்தன தெரிவித்தார்.