நாட்டில் விரைவான பொருளாதார முன்னேற்றத்தை கொண்டுவரக்கூடிய திறமையான தலைவர் ரணில் விக்கிரமசிங்க மட்டுமே. அதனால்தான் அவருக்கு நான் ஆதரவளித்தேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அதேவேளை, நாட்டின் தற்போதைய இந்த நெருக்கடி நிலைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மட்டும் காரணமல்ல. நானும் எனக்கு முன்னர் நாட்டை ஆண்ட அரசாங்கங்கள் உட்பட அனைவரும் அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஆங்கில வார இறுதி பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கியுள்ள பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், கோட்டாபய ராஜபக்ச ஒரு அரசியல்வாதி அல்ல. அவர் நாட்டை விட்டு செல்வதற்கு முன்பு என்னிடம் ஆலோசனை கேட்டிருக்க வேண்டும். அதனை அவர் செய்யவில்லை. அவர் தீர்மானம் எடுத்துவிட்டே என்னிடம் நான் வெளிநாடு செல்லப் போகிறேன் என தெரிவித்தார்.
அதற்கு நான் பதிலளிக்கும் வகையில் எதையும் கூறவில்லை. அவரது ஆட்சியின் கீழ் கடந்த மே மாதம் வரை நான் பிரதமராக பதவி வகித்துள்ளேன்.
அவர் வெளிநாடு போவதாக என்னிடம் கூறியிருந்தால் நான் வேண்டாம் என்றே சொல்லி இருப்பேன்.
அவரை குறை கூற முடியாது. முன்னாள் மத்திய வங்கி ஆளுநர்கள் உட்பட அவருக்கு ஆலோசனை வழங்கிய நிபுணர்களை அவர் நம்பினார். எவ்வாறாயினும் அவர் தமக்கான பணிகளை சரியாக நிறைவு செய்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.