ஐக்கிய மக்கள் சக்தியின் 'கல்வி ஊழியர் சங்கத்தின்' கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புச் செயலாளராக ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி அமைப்பாளரும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான ஹிதாயத் சத்தார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் கெளரவ ரஞ்சித் மத்தும பண்டார அவர்கள் மற்றும் ‘சமகி கல்வி ஊழியர் சங்கத்தின்’ தலைவர் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ துஷார இந்துனில் அமரசேன அவர்களினால் நேற்று வியாழக்கிழமை 17/11/2022 வழங்கி வைக்கப்பட்டது. இந்தப் பதவிக்கு ஹிதாயத் சத்தார் அவர்களை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் கெளரவ சஜித் பிரேமதாச அவர்களும், அக் கட்சியின் கண்டி மாவட்டத் தலைவர் கெளரவ லக்ஷ்மன் கிரியெல்ல அவர்களும் பரிந்துரை செய்துள்ளனர்.
யஹலத்தன்னை மகா வித்தியாலயம் மற்றும் கம்பளை சாஹிராக் கல்லூரியின் பழைய மாணவரான ஹிதாயத் சத்தார் இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் துறையில் பட்டப் பின் படிப்பையும் (Post Graduate Diploma in Marketing) மற்றும் லண்டன் மெற்றோபொலிட்டன் பல்கலைக் கழகத்தின் வணிக நிர்வாகத் துறையில் முதுமாணிப் (MBA) பட்டதாரியுமாவார். இவர் கண்டியில் நீண்டகாலம் சமூக, கல்விச் சேவை புரிந்த முன்னாள் கல்விப் பணிப்பாளர் மர்ஹூம் S L அப்துல் சத்தார் அவர்களின் புதல்வர் என்பதும் குறிப்பிடத்தக்கது.