(இராஜதுரை ஹஷான்)
குறுகிய காலத்தில் அரச வருமானத்தை அதிகரித்துக் கொள்ள நடுத்தர மக்களை நெருக்கடிக்குள்ளாக்காமல், தவறான தீர்மானங்களினால் இழக்கப்பட்ட வரி வருமானத்தை மீள பெற்றுக்கொள்ள அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும்.
25 சதமாக காணப்படும் சீனிக்கான விசேட வரியை நீக்கி, வரி தொகை 50 ரூபாவாக அதிகரிக்க வேண்டும்.
வரி சலுகையின்பயனை நாட்டு மக்கள்பெறவில்லை, ஒருசில இறக்குமதியாளர்கள்மாத்திரம் திருப்தியடைந்துள்ளார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தெரிவித்தார்.
கொழும்பில் புதன்கிழைம (டிச.07) இடம்பெற்ற 'சர்வஜன நீதி'ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தின் தவறான பொருளாதார முகாமைத்துத்தினால் நாட்டு மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
பல்வேறு வழிமுறைகளில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கம் அரசாங்கத்திடம் கிடையாது.
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மென்மேலும்நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம்சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டு மக்களை இலக்காக கொண்ட நேரடி வரி விதிப்பை தவிர்த்து அரச வருமானத்தை அதிகரித்துக்கொள்ள அரசாங்கத்திடம் எவ்வித திட்டமும் கிடையாது.
2023 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் ஊடாக 3415 பில்லியன் ரூபா அரச வருமானத்தை திரட்டிக் கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில் அரச செலவினம் 5819 பில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அரச வருமானத்திற்கும், அரச செலவிற்கும் இடையிலான பற்றாக்குறை 2404 பில்லியன் ரூபாவாக காணப்படுகிறது.
வருடாந்த அரசமுறை கடன்செலுத்தலுக்கு 2025 பில்லியன்ரூபா ஒதுக்கப்பட்டுள்ள நிலையில்அரச கடனையும்,வரவு -செலவுத் திட்ட பற்றாக்குறையையும் நிவர்த்தி செய்ய 4979 பில்லியன் ரூபா தேவைப்படும்.இந்த நிதியை திரட்டிக் கொள்ள அரசாங்கத்திடம் நடைமுறைக்கு சாத்தியமான எந்த திட்டமும் கிடையாது.
பொதுஜன பெரமுன அரசாங்கம் 2019ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தவுடன் தமது சகாக்களை திருப்திப்படுத்துவதற்காக ஒருகிலோகிராம் இறக்குமதி சீனிக்கு 50 ரூபாவாக காணப்பட்ட வரியை 25 சதமாக குறைத்தது.
இந்த வரி குறைப்பினால்ஒருகிலோகிராம் சீனி இறக்குமதியின்போது 49.75ரூபாவை அரசாங்கம்இழக்க நேரிட்டது.
சீனி வரிகுறைப்பினால்அரசாங்கம்முதல்மூன்று மாதகாலப்பகுதியில் மாத்திரம் 16 பில்லியன்ரூபா வரி வருமானத்தை இழந்துள்ளது. 2020 ஆம்ஆண்டு ஒருகிலோகிராம் சீனி 110 ரூபாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு 125 ரூபாவிற்கும், 2021ஆம்ஆண்டு ஒரு கிலோகிராம் சீனி 103 ரூபாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு 128 ரூபாவிற்கும், 2022 ஆம் ஆண்டு 175 ரூபாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு 241 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. சீனி வரி குறைப்பின் பயனை நாட்டு மக்களும் அரசாங்கமு பெற்றுக்கொள்ளவில்லை ஒருசில இறக்குமதி விநியோகஸ்தர்கள் மாத்திரம் இந்த நிவாரண சலுகையை முழுமையாக பெற்றுக்கொண்டுள்ளார்கள்.
2020 ஆம்ஆண்டு செப்டெம்பர் மாதம்முதல்2022 ஆம்ஆண்டு வரையான காலப்பகுதியில் மாத்திரம் அரசாங்கம் 49 பில்லியன் ரூபா வரி வருமானத்தை இழந்துள்ளது.
நாட்டில் நிதி நிலைமை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு தரப்பினரின் நலனுக்காக மாத்திரம் வரி விலக்கு வழங்குவது எந்த விதத்தில் நியாயமாகும். சீனி வரிகுறைப்பினால் இழக்கப்பட்டுள்ள வரி வருமானத்தை மீள பெற்றுக்கொள்ள அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும். தற்போது 25 சதமாக காணப்படும்வரி வீதத்தை 50 ரூபாவாக அதிகரிக்க வேண்டும்.
2023 ஆம் ஆண்டுக்காதன வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு 410 பில்லியன்ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. படையினரது உணவு மற்றும் சீறுடைக்காக 53பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் இராணுவத்தினருக்கு தரமான மற்றும் போசனையான உணவு வழங்கப்படுகிறதா என்பது குறித்து ஆராய வேண்டும். இராணுவத்தினரது உணவு வேளையில் சோறு,அன்னாசி பழத்துண்டு, முட்டை மற்றும் உருளை கிழங்கு மாத்திரமே உள்ளடக்கப்பட்டுள்ளது.
சீனி வரிக்குறைப்பின் ஊடாக ஒரு சில இறக்குமதியாளர்கள் நன்மையடைந்ததை போன்று, இராணுவத்தினருக்கு தரமற்ற உணவை வழங்கி பிறிதொரு தரப்பினர் நன்மையடைகிறார்களா என்ற சந்தேகம் காணப்படுகிறது என்றார்.
