ஈரான் தலைநகர் தெஹ்ரானில் தீப்பிடித்த பதினேழு மாடிக் கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்ததில் தீயணைப்பு வீரர்கள் உட்பட சுமார் 75 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் சிக்கிக்கொண்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
சுமார் ஐம்பது ஆண்டுகாலப் பழைமை வாய்ந்த இந்தக் கட்டிடத்தில் ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் உட்படப் பல்வேறு நிறுவனங்கள் இயங்கிவருகின்றன.
ஒரு சில மணிநேரங்களாகத் தீ எரிந்துகொண்டிருந்ததால் மேல் மாடிகளிலும் தீப்பிடிக்க ஆரம்பித்ததாகவும், நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக கட்டிடத்தின் பெரும்பகுதி சரிந்து விழுந்ததாகவும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
தற்போது தீயை அணைக்கும் பணிகளும், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன.