இஸ்ரேல் இராணுவத்தின் தொடர் தாக்குதலால் நிலைகுலைந்துள்ள காஸாவில், மயானங்களில் மக்கள் தங்கியிருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
காஸாவில் கடுமையான தாக்குதல்களால் கட்டடங்கள் நிர்மூலமாக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக மக்கள் தங்கியிருக்க போதுமான வசதிகள் இல்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.
அமுலிலுள்ள காஸா – இஸ்ரேல் போர் நிறுத்தம் காரணமாக இடம்பெயர்ந்திருந்த பலஸ்தீன மக்கள் தமது சொந்த வீடுகளுக்குத் திரும்பி வருகின்றனர். எனினும் அவர்களின் வீடுகள் நிர்மூலமாக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக குறித்த பகுதி மக்கள் மயானங்களில் கொட்டகைகளை அமைத்து வாழ்ந்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கான் யூனிஸ் பகுதியில், கடந்த 5 மாதங்களாகக் கல்லறைகளுக்கு மத்தியில் மக்கள் கொட்டகை அமைத்து வாழ்ந்து வருகின்றனர்.
இரவு வேளையில் மயானப்பகுதியில் நாய்கள் நடமாட்டம் அதிகம் உள்ளமையினால், பிள்ளைகளைப் பாதுகாப்பது பெரும் சவாலாக மாறியுள்ளதாக பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தற்போதுள்ள அமைதிக் காலப்பகுதியில் தமது பகுதிகள் மறுசீரமைத்துக் கொடுக்கப்பட வேண்டும் என காஸா பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
