Our Feeds


Saturday, April 25, 2026

Zameera

மருதானை ரயில் நிலையத்தின் முதற்கட்ட நவீனமயமாக்கல் பணிகள் நிறைவு


 'கிளீன் ஸ்ரீலங்கா' வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக, 'Dream Destination' திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட மருதானை ரயில் நிலையத்தின் முதற்கட்ட நவீனமயமாக்கல் பணிகள் நிறைவு செய்யப்பட்டு, இன்று (25) முற்பகல் பயணிகள் பயன்பாட்டிற்காக திறந்துவைக்கப்பட்டது.

ரயில் பயணிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், மருதானை ரயில் நிலையத்தின் புராதனத் தன்மைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தெரிவு செய்யப்பட்ட சில பகுதிகள் மாத்திரம் இவ்வாறு நவீனமயமாக்கப்பட்டுள்ளன. இதன் கீழ் பிரதான கட்டிடம் திருத்தப்பட்டதுடன், 05 மற்றும் 06 ஆம் இலக்க மேடைகளின் சுகாதார வசதிகள் மேம்படுத்தப்பட்டு, சூழல் அழகுபடுத்தும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்திற்காக 35 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதுடன், இதற்கான நிதி அனுசரணையினை அக்பர் நிறுவனம் வழங்கியுள்ளது. தொல்பொருள் திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ், NIO Engineering நிறுவனத்தின் ஆலோசனை சேவைகளுக்கமைய ஆறு மாத காலப்பகுதிக்குள் இந்த புனரமைப்பு பணிகள் முறையாக நிறைவு செய்யப்பட்டுள்ளன.

இலங்கையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ரயில் நிலையங்களில் ஒன்றான மருதானை ரயில் நிலையம், கொழும்பு மாவட்டத்தில் அமைந்துள்ள நிலையங்களில் இரண்டாவது மிகப்பெரிய நிலையமாகும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் நாட்டின் அனைத்து பாகங்களுக்கும் செல்வதற்காக ஒன்றுகூடும் இந்த ரயில் நிலையத்தை பல கட்டங்களின் கீழ் நவீனமயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இங்கு கருத்துத் தெரிவித்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க.

கடந்த காலத்தில் ஏற்பட்ட நெருக்கடியான சூழ்நிலையிலும் எவ்வித தாமதமுமின்றி ஆறு மாத காலத்திற்குள் பிரதான கட்டிடம் உள்ளிட்ட வளாகத்தில் நிலையான நவீனமயமாக்கல் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்தப் பொது வசதிகளை முறையாகப் பயன்படுத்துவதும், அவற்றைச் பாதுகாப்பாகப் பேணுவதும் பயணிகள் மற்றும் ரயில் திணைக்கள ஊழியர்களின் முதன்மையான பொறுப்பாகும். 

நாட்டின் நன்மையை விரும்பும் அனைத்து மக்களும் இவ்வாறான தேசிய சொத்துக்களைப் பாதுகாக்க ஒன்றிணைய வேண்டும். பொதுச் சொத்துக்களுக்கு விளைவிக்கப்படும் சேதங்களுக்கு எதிராக சமூகம் அணிதிரள வேண்டும்.

கடந்த காலங்களில் புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம் நவீனமயமாக்கப்பட்ட பின்னர், அதற்கு விளைவிக்கப்பட்ட சேதங்களுக்கு எதிராக பாரிய சமூக எதிர்ப்பு கிளம்பியதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், அது அரசாங்கத்திற்கு ஒரு பெரிய சமூக பலமாக அமைந்ததாகவும், எனவே இவ்வாறான பொதுச் சொத்துக்களையும் வரலாற்று மரபுகளையும் பாதுகாப்பது ஒவ்வொரு பிரஜையினதும் பொறுப்பாகும் என்றும் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் (Clean Sri Lanka செயலகம்) பொறியியலாளர் எஸ்.பி.சி. சுகீஸ்வர, ரயில் பொது முகாமையாளர் ரவீந்திர பத்மப்பிரிய, அக்பர் பிரதர்ஸ் நிறுவனத்தின் உப தலைவர் அஸ்கி அக்பர் அலி, பணிப்பாளர்களான ஹுஸைன் அக்பர் அலி, ஹதீம் அக்பர் அலி, முகாமைத்துவப் பணிப்பாளர் ரஜீவ் த சில்வா, செயற்பாட்டுப் பணிப்பாளர் துஷார லக்ஷ்மன் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Subscribe to this Blog via Email :
Latest
Previous
Next Post »