Our Feeds


Thursday, July 9, 2026

Zameera

பேரை ஏரியைச் சுத்தம் செய்ய கடல் நீர் உட்புகுத்தும் திட்டம்


 உடனடி மற்றும் குறுகிய கால தீர்வாக, பேரை ஏரிக்குள் கடல் நீரை உட்புகுத்தி, அதன் மூலம் ஏரியைச் சுத்தம் செய்யும் விசேட தொழில்நுட்பத் திட்டம் ஒன்றை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக முழுமையான நிதிப் பங்களிப்பை வழங்குவதற்கு நாட்டின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான பொறியியலாளர் நஹில் விஜேசூரிய சம்மதம் தெரிவித்துள்ளார்.

ஏரியின் தூய்மையையும் அழகையும் நிலையான முறையில் பேணுவதற்கான நீண்ட கால திட்டங்களை, இந்த வருட அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட  நிதியின் கீழ் செயல்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இதற்காக கொழும்பு மாநகர சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளன.

ஹுனுபிட்டிய கங்காராம விகாராதிபதி, வணக்கத்திற்குரிய கலாநிதி கிரிந்தே அஸ்ஸஜி நாயக்க தேரரின் தலைமையில் மற்றும் அவரது ஆலோசனையின் பேரில், பேரை ஏரியைச் சுத்தம் செய்வதற்கும் அழகுபடுத்துவதற்கும் அரச மற்றும் தனியார் துறைகளை ஒருங்கிணைத்த விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (09) அந்த விகாரையில் நடைபெற்றது.

இதன்போது, இது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் எவ்வாறு மேற்கொள்ளப்படும் என்பது குறித்த மேலதிக விபரங்கள் கலந்துரையாடப்பட்டன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »