ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் வெளியிட்டுள்ள கருத்தையும் அதை கூறியவர் யார் என்ற அரசியல் கோணத்தில் மட்டும் பார்க்காமல், அதிலுள்ள செய்தியைக் கவனத்திற்கொள்ளவேண்டுமென பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளார்.
அவரது உத்தியோகபூர்வ எக்ஸ் தள கணக்கில் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் மேலும்,
எமது பொதுச் செயலாளர் சாகர காரியவசம் வெளியிட்டுள்ள கருத்தை, அதை கூறியவர் யார் என்ற அரசியல் கோணத்தில் மட்டும் பார்க்காமல், அதிலுள்ள செய்தியைக் கவனத்திற் கொள்ள வேண்டும்.
பொலிஸ் என்பது ஆட்சியில் இருக்கும் எந்த அரசாங்கத்தினதும் அரசியல் கருவியாக மாறக் கூடாது.
அது அரசுக்கும் மக்களுக்கும் சேவை செய்யும் சுயாதீன நிறுவனமாக இருக்க வேண்டும். மக்களைப் பாதுகாக்கவும் சட்டத்தை நிலைநாட்டவும் மக்களின் உண்மையான தேவைகளுக்கு பதிலளிக்கவும் பொலிஸாரை பயன்படுத்துங்கள். கருத்து வேறுபாடுகளை அடக்குவதற்கோ அல்லது அரசியல் கணக்குகளை தீர்ப்பதற்கோ பொலிஸாரை பயன்படுத்த வேண்டாம்’’ எனத் தெரிவித்துள்ளார்.
