Our Feeds


Thursday, August 27, 2026

ShortNews

இலங்கை மக்கள் அடுத்தடுத்து ஏமாற்றப்பட்ட இரு சந்தர்ப்பங்களை விளக்கிய சஜித்!


இலங்கை மக்கள் அடுத்தடுத்து இரு சந்தர்ப்பங்களில் ஏமாற்றப்பட்டதாகவும், 2019-இல் ஏமாந்து நாடு வங்குரோத்தானதாகவும், 2024-இல் ஏமாற்றப்பட்டதால் முழு சமூகமும் முற்றாக முடங்கியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மேலும் விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள், தொழிலதிபர்கள், சிறுவர்கள் மற்றும் பெண்கள் உட்பட 220 இலட்சம் மக்களும் தற்போது கடுமையான அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

அனுராதபுரம் மாவட்டத்தின் மெதவச்சிய தொகுதியின் ரம்பேவ பகுதியில் நடைபெற்ற சமகி ஜன பலவேகயவின் உறுப்பினர் ஊக்குவிப்பு மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் கூற்றுப்படி, ஒரு நபர் 30 நாட்கள் வாழ்வதற்கு ரூ. 17,315 போதுமானது என்றும், இந்த கணக்கெடுப்பு மாவட்ட மட்டத்திலும் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர், தற்போதைய அரசின் கொள்கை பொய் தரவுகளின் அடிப்படையிலேயே அமைந்துள்ளதாகக் குற்றம் சுமத்தினார்.

இன்றைய அரசாங்கம் பொய்கள் மற்றும் அப்பட்டமான ஏமாற்றங்களின் மீது இயங்கி வருவதாகச் சுட்டிக்காட்டிய அவர், தேர்தல் காலத்தில் வயலில் இறங்கி நெல் சாப்பிட்டு ஒரு கிலோ நெல்லுக்கு ரூ. 150 தருவதாகக் கூறியபோதிலும், இன்று அது ரூ. 120 ஆகக் குறைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

மின்சாரக் கட்டணத்தை 33% குறைத்தல், துறைமுகத்தில் இறக்கப்படும் விலைக்கு எரிபொருள் வழங்குதல் மற்றும் 12 இலட்சத்திற்கு விட்ஸ் (Vitz) கார் வழங்குதல் என உறுதியளித்த எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »