Our Feeds


Thursday, August 27, 2026

ShortNews

எதிர்க்கட்சியினர் எதை விதைத்தார்களோ அதனையே இன்று அறுவடை செய்கின்றனர் - சந்தன சூரியாராச்சி!


கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்தவர்கள் செய்த தவறுகளையும் ஊழல்களையுமே இன்று எதிர்கொண்டு வருகிறார்கள். அவர்கள் விதைத்தவற்றையே இன்று அறுவடை செய்கிறார்கள் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியாராச்சி தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு வியாழக்கிழமை (27) கருத்து வெளியிடும்போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. முந்தைய அரசாங்கங்களின் காலத்தில் நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த வழக்குகள் பல ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்டதால், தொழில்நுட்பக் காரணங்களைக் கூறி வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன. ஆனால், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எந்தவித அரசியல் தலையீடுகளுமின்றி, பொலிஸ் விசாரணைகள் மூலம் நீதியை நிலைநாட்டி வருகிறது.

மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆட்சியின் போது இடம்பெற்ற வீண்விரையங்கள் தற்போது ஒவ்வொன்றாக வெளிவர ஆரம்பித்துள்ளன. முன்னாள் சபாநாயகர் ஒருவர் இரண்டு ஆண்டுகளில் கோடிக்கணக்கான ரூபாவை எரிபொருளுக்காக மட்டும் செலவிட்டுள்ளார்.

அப்போதைய பிரதி சபாநாயகர் ஒருவர் தனது தனிப்பட்ட வாகனத்திற்கு பாராளுமன்ற சலுகைகளைப் பயன்படுத்தி 85 இலட்சம் ரூபா மதிப்பிலான எரிபொருளைப் பயன்படுத்தியிருப்பதாக தெரியவந்துள்ளன. எனினும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஆட்சியில் இவ்வாறான ஊழல்கள் மற்றும் வீண்விரையங்கள் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளன.

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த சுமார் 62 முக்கிய குற்றவாளிகள் வரை பொலிஸார், விசேட அதிரடிப்படை மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையினரின் தலையீட்டினால் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், கடந்த மாதங்களில் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி, சுகாதாரம் மற்றும் போக்குவரத்துத் துறைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்கத்தின் இந்த வெற்றிகளைக் கண்டு எதிர்கட்சியினர் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.

பொலிஸ் துறை, நீதித்துறை மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் உயர் அதிகாரிகளுக்கு எதிராகத் தனிப்பட்ட விமர்சனங்களை முன்வைத்து வழக்குகளைத் தாமதப்படுத்த எதிர்கட்சியினர் முயல்கின்றனர். சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதில் அரசாங்கம் தொடர்ந்தும் உறுதியாகச் செயற்படும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »